கோலாலம்பூர், ஜன 9 – தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் உள்ள எஸ்.எம்.இ கார்ப் (SME Corp) மூலம் 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு RM 134.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலேசியாவை முதன்மை தொழில்முனைவோர் நாடாக மாற்றுவதற்கான தேசிய தொழில்முனைவோர் கொள்கை 2030இன் மடானி பொருளாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்ப இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளதாகத் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பூமிபுத்ரா ஏற்றுமதி அறிமுகத் திட்டம் ‘GEB’, SME Go Global திட்டம் மற்றும் ஏற்றுமதி திறன்களையும் வணிக மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் உள்ளடக்கிய ஏற்றுமதி நோக்கங்களுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் மேலும் கூறினார்.
41% விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், 15% விழுக்காடு ஏற்றுமதியிலும், சராசரி தொழிலாளர் உற்பத்தித்திறன் வளர்ச்சியில் 3.5% விழுக்காடு மற்றும் MSME வணிக நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்குவதற்கு 90% விழுக்காடு பங்களிப்பையும் இலக்காகக் இந்த உதவி திட்டம் கொண்டுள்ளதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.