பெட்டாலிங் ஜெயா, நவ 25 – பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கம்யூனிசத்தின் கூறுகள் அடங்கியிருப்பதாக நம்பப்படும் எட்டு புத்தகங்களை உள்துறை அமைச்சு பறிமுதல் செய்தது.
நவம்பர் 23ஆம் திகதி, வியாழக்கிழமை, தகவல் கிடைத்ததையடுத்து, அமைச்சின் கட்டுப்பாடு மற்றும் அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில் அப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அச்சு மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984, பிரிவு 18ன் விதிகளுக்கு ஏற்ப, புத்தக வெளியீட்டின் புழக்கத்தை தடுக்க பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அமைச்சு கூறியுள்ளது.
பொது ஒழுங்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பொதுமக்களின் கருத்தைத் தூண்டும் கூறுகளைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளியீடுகளை தடுக்க உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் கடப்பாட்டை கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.