கோத்தா திங்கி , டிச 28 – ஜோகூரின் டேசாருவில் “The Westin” கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையால் அடித்துச் செல்லப்பட்டதால் காணாமல்போன சிங்கப்பூர் ஆடவரின் உடல் இன்று காலையில் மீட்கப்பட்டது. நேற்று நண்பகல் மணி 12.30 அளவில் டேசாரு கடலில் தமது மகனுடன் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கி மாண்ட 49 வயதுடைய ஐசக் கெல்வின் தான் லீ தோங் உடல் மீட்கப்பட்டதாக பெனாவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி மஸ்ரி இப்ராஹிம் தெரிவித்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் ஐசக் கெல்வினின் உடலைக் கண்டதாக அவர் கூறினார்.
காணாமல்போன இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஐசக் கெல்வின் உடல் மீட்கப்பட்டது. கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது பெரிய அலையினால் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் அவரது 16 வயது மகனை காப்பாற்றினர்.