புத்ரா ஜெயா, ஜன 6 – ஜோகூரில் வெள்ளம் ஏற்பட்டிருந்தபோதிலும் திங்கள் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் எஸ்.பி.எம் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே திட்டமிட்ட தேதிகளில் எஸ்.பி.எம் தேர்வு நடைபெறும் என பி.கே.ஆர் மகளிர் பிரிவு ஏற்பாட்டிலான கிழக்குக்கரை வெள்ள உதவித் திட்டத்தை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். வெள்ளத்தின்போதும் வெள்ளதிற்கு பிறகான ஆயத்த நடவடிக்கையில் எஸ்.பி.எம் மாணவர்கள் எவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு மலேசிய தேர்வு வாரியம் மற்றும் மாநில கல்வித் துறைகளுடன் அமைச்சு இணைந்து பணியாற்றும் என பத்லினா சிடெக் கூறினார்.
வெள்ளத்தின்போது எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். வெள்ளத்தினால் தேர்வு எழுதும் இடத்திற்கு அவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும் அவர்களை அங்கு கொண்டுச் சேர்ப்பதில் இதர அரசாங்க நிறுவனங்களின் உதவிகளையும் ஆதரவையும் நாங்கள் பெறமுடியும் என அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 3,340 தேர்வு மையங்களில் 2023ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வை 395,870 மாணவர்கள் எழுதவிருக்கின்றனர். எஸ்.பி.எம் வாய்மொழி சோதனை திங்கள் முதல் நடைபெறவிருக்கும் வேளையில் ஜனவரி 30 ஆம் தேதி முதல் எழுத்துப்பூர்வமான தேர்வு நடைபெறும். டிசம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை அறிவியல் நடைமுறை தேர்வு நடைபெறும்.