ஈப்போ, டிசம்பர் 18 – பேராக், ஈப்போ, தாமான் ஜாத்தி இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவரை காரில் மோதி இழுத்துச் சென்றதாக நம்பப்படும், டெபுடி சுப்ரிடெண்டன் பதவி வகிக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக, இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
44 வயது முஹமட் நஸ்ரி அப்துல் ரசாக் எனும் அவ்வாடவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் எஸ்.புனிதா முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
டிசம்பர் 15-ஆம் தேதி, நண்பகல் மணி 12.05-க்கும் 12.40-க்கும் இடைப்பட்ட நேரத்தில், கிந்தா, தாமான் ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு அருகில், முஹமட் ஜஹாரிப் அப்பெண்டி எனும் மாணவனை கொலை செய்ததாக, அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
எனினும், இன்று அவனிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, SPM தேர்வுவெழுதும் மாணவன் ஒருவனின் மோட்டார் சைக்கிளை பின்னாலிருந்து துரத்திச் சென்ற கார் மோதித் தள்ளியதில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.