ஷா ஆலாம், ஜனவரி 2 – மலேசியர்கள் இனி தங்கள் வாகனம் ஓட்டும் அனுமதியையும், “ரோடெக்ஸ்” சாலை வரியையும், MyJPJ செயலி வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி அது அமலுக்கு வருகிறது.
அதோடு, “டிஜிட்டல்” அல்லது இலக்கவியல் முறையில், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்பவர்களுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில், ஐந்து ரிங்கிட் கழிவும் வழங்கப்படுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த புதிய வசதியின் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் ஓட்டுனர் உரிமத்தையும், சாலை வரியையும் இலக்கவியல் முறையில் மிகவும் எளிதாக புதுப்பித்துக் கொள்ள முடியும். அது அவர்களின் நேரத்தையும், பணத்தையும் மிஞ்சப்படுத்த உதவும்.
அதோடு, சாலை போக்குவரத்து துறை முகப்புகளில் நெரிச்சலை தவிர்க்கவும் அது துணைபுரியும் என லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும், மலேசியர்கள் மட்டுமே அந்த சலுகையை பயன்படுத்த முடியும். வெளிநாட்டவர்கள் அல்லது MyKAS, MyPR குடியிருப்பு அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு அது பொருந்தாது.