குவாலா திரங்கானு, மார்ச் 11 – Instagram-மில் பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கி திரங்கானுவைச் சேர்ந்த இளைஞர் 30,700 ரிங்கிட்டை ஏமாந்திருக்கிறார்.
பொருட்களை வாங்கி விற்கும் பகுதி நேர வேலை உண்டு எனக் கூறி 24 வயது அவ்வாடவரை Instagram கணக்கொன்றின் admin பிப்ரவரி 26-ஆம் தேதி அணுகியுள்ளார்.
முதலில் தயங்கினாலும், அதிக கமிஷன் பார்க்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி பின்னர் அவர் வேலைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கொடுக்கப்பட்ட ஆறு வேலைகளைக் கச்சிதமாக முடித்தும் கொடுத்துள்ளார்; முதல் இரண்டு வேலைகளுக்கு கூறியபடியே கமிஷன் கொடுக்கப்பட்டு விட்டது.
எனினும், எஞ்சியவற்றுக்கான 30,700 ரிங்கிட் கமிஷனைத் தராமல் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி admin இழுத்தடித்திருக்கிறார்.
கடைசியில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து அவ்விளைஞர் போலீசில் புகார் செய்தார்.
இது போன்ற மோசடிகள் குறித்து அதிக கவனமுடன் இருக்குமாறு திரங்கானு போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் கேட்டுக் கொண்டார்.
பகுதி நேர வேலையில் நல்ல இலாபம் கிடைக்கும் எனக் கூறுவார்கள்; செய்து முடிக்கும் ஒவ்வொரு வேலைக்கும் 10% கமிஷன் எல்லாம் கிடைக்கும் என ஆசைக் காட்டுவார்கள்.
ஆரம்பத்தில், சொல்லியபடி கமிஷனைத் தந்து நம்ப வைத்து விட்டு, பிறகு காணாமல் போய் விடுவார்கள்.
எனவே, சமூக ஊடகங்களில் இது போன்ற ‘வேலை வாய்ப்பு’ விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம் என மக்களை டத்தோ மஸ்லி கேட்டுக் கொண்டார்.