பினாங்கு, பிப் 4 – பினாங்கு தைப்பூச விழாவில் தண்ணீர் மலை, ஸ்ரீ பால தண்டாயுதப்பாணி ஆலயத்திற்கு பக்தர்களும், பொது மக்களும் செலுத்திய உண்டியல் பணம் ரொக்கம் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 522 ரிங்கிட் 20 சென் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையரும், பத்து உர்பன் சட்டமன்ற உறுப்பினருமான குமரேசன் ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச விழா உண்டியல் பணம் நேற்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் பினாங்கு கோம்தார் கட்டடத்தில் 5 ஆவது மாடியில் எண்ணப்பட்டது.
பணி ஓய்வுப்பெற்ற அதிகாரிகள், அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளின் பிரதிநிகள் என சுமார் 70 பேர் ஈடுபட்டு, மொத்தம் 32 உண்டியல்களின் வசூல் பணத்தை எண்ணியுள்ளனர்.
அவ்வகையில், 32 உண்டியல்களின் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம், மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 522 வெள்ளி 20 சென் ஆகும்.
அதுமட்டுமில்லாமல், கோயிலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட தங்கம், 50.52 கிராம் ஆகும். அதேவேளையில், தங்க ரதத்தில் செலுத்தப்பட்ட தங்கம் 15.98 கிராம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த உண்டியல் பணத்தில் சில்லரை காசுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இன்னும் எண்ணப்படவில்லை என்றும், அவை பின்னர் வங்கியில் எண்ணப்பட்டு, தொகை அறிவிக்கப்படும் என்று குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.