கலிபோர்னியா, ஜனவரி 31 – எண்ணங்களை வைத்து ஒருவரது மூளையை இயக்க முடிந்தால் எப்படி இருக்கும்?
அது மட்டும் சாத்தியமானால், தற்போது நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு அது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
அதனை சாத்தியமாக்கும் அரிய முயற்சியை தான் தொடங்கியுள்ளது, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம்.
அதற்காக, எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆற்றல் கொண்ட BCI கம்பியில்லா இணைப்பை உருவாக்கும் வகையில், “சில்லு” ஒன்றை மனிதனின் மூளையில் பொருத்தி அது சோதனையை தொடங்கியுள்ளது.
மனிதனின் மூளையை கணினியுடன் இணைப்பது தான் அதன் நோக்கமாகும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம், மனிதர்களை கொண்டு அந்த இணைப்பை சோதனை செய்ய கடந்தாண்டு நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய வேளை ; தற்போது அந்த சோதனை தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நியூராலிங்க் நிறுவனம் குரங்குகளை வைத்து அந்த சோதனையை மேற்கொண்டது.
அந்த சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, முதல் முறையாக “டெலிபதி” என பெயரிடப்பட்டிருக்கும் அந்த சில்லு மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுகிழமை, அந்த சோதனை தொடங்கியதையும், அறுவை சிகிச்சை வாயிலாக டெலிபதி சில்லு பொருத்தப்பட்ட நபர் உடல்நலம் தேறி வருவதையும், எலோன் மாஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டெலிபதி சில்லு, எண்ணங்கள் மூலம் தொலைப்பேசி, கணினி உட்பட பல்வேறு சாதனங்களை கட்டுப்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க கட்டமாக, கை, கால்கள் செயலிழப்புக்கு இலக்கானவர்களுக்கு அந்த சில்லு வழங்கப்படும்.
மூளை செயல்பாட்டை தூண்டிவிடுவது தான் டெலிபதி சில்லுவின் வேலை. அதன் வாயிலாக ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களும், Schizophrenia எனும் மனச்சிதைவுக்கு இலக்கானவர்களும், உடல் செயலிழந்தவர்களும் பயனடைவார்கள் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.