கோலாலம்பூர், நவம்பர் 7 – வடக்கிழக்கு பருவமழை அல்லது நாட்டில் பருவமழைக் காலம், வரும் சனிக்கிழமை, நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என, MetMalaysia – வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
அந்த காலக் கட்டம் நெடுகிலும், நான்கு முதல் ஆறு அத்தியாயங்கள் அல்லது கட்டங்கள் வரை அடைமழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, MetMalaysia தலைமை இயக்குனர் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறியுள்ளார்.
இம்மாதம் தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரி வரையில், கிளந்தான், திரங்கானு, பஹாங், ஜொகூர், சரவாக் மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் அடை மழை பெய்யும்.
எனினும், பருவமழை வலுவாகவும், அதே நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் இருந்தால், நாட்டின் பிற மாநிலங்களிலும், அடை மழை பெய்யக்கூடும்.
அதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் மிகவும் அதிகம்.
அதோடு, தொடர்ச்சியான மற்றும் வலுவான வடகிழக்கு காற்றினால், கடல் சீற்றம், கடல் மட்டம் உயரும் அபாயம் மற்றும் தென் சீனக் கடலில் பெரிய அலைகள் ஏற்படலாம்.
இவ்வலையில், அடுத்தாண்டு பிப்ரவரி தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில், பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, சபா, லாபுவான் மற்றும் சரவாக்கின் வட பகுதிகளில் மழை பொழிவு குறைவாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மார்ச்சில், வறண்ட வானிலையையும், வெப்ப அலையையும் ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.