புத்ராஜெயா, மார்ச் 3 – ஆடம்பர வீடுகளை வாங்கும் பூமிபுத்ராக்களுக்கு விலைக் கழிவுச் சலுகை இனியும் வழங்கப்படக் கூடாது என முன்னாள் நிதியமைச்சர் ஒருவர் பரபரப்பு பரிந்துரையை முன் வைத்துள்ளார்.
பணக்காரப் பூமிபுத்ராக்களுக்கு, புதியப் பொருளாதாரக் கொள்கையில், அச்சலுகை அகற்றப்பட வேண்டும் என டான் ஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களை இலக்காகக் கொண்ட கொள்கைகளுக்கு ஆதரவான அந்நடவடிக்கை, நிச்சயம் சமூகத்தை மேம்படுத்தும் என்றார் அவர்.
20 லட்சம் ரிங்கிட் விலையிலான பங்களாக்களை வாங்கும் அளவுக்கு சக்திப் படைத்த பூமிபுத்ராக்களுக்கு, சொத்து வாங்குவதில் விலைக் கழிவு என்பது இனியும் சரிபட்டு வராது என அவர் சொன்னார்.
மாறாக, குறைந்த வருமானம் பெறும் பூமிபுத்ராக்கள் சொந்தமாக வீடு வாங்குவதற்கே அந்த விலைக் கழிவுச் சலுகைப் பயன்பட வேண்டும் என்றார் அவர்.
அதோடு, அந்த விலைக் கழிவுச் சலுகை ஆடம்பரம் அல்லாத சொத்துக்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டு, அக்கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என வாஹிட் கூறினார்.
2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் பேசிய போது, மலேசியப் பங்குச் சந்தையின் தலைவருமான டான் ஸ்ரீ வாஹிட் அவ்வாறு பரிந்துரைத்தார்.