
கோலாலம்பூர், மார்ச் 15 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தற்காலிக வேலை பயண பாஸ் வெளியிடப்படுவது கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதை , 3 துறைகளைச் சேர்ந்த 10,000 இந்திய வர்த்தகங்கள் மூடுவிழாக் காணுமென , மைக்கி – மலேசிய இந்திய வர்த்தக -தொழிற்துறை அமைப்பு அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஜவுளி, பொற்கொல்லர், முடிதிருத்தும் ஆகிய மூன்று துணை தொழில்துறைகள் அந்த பாதிப்பை எதிர்நோக்குமென மைக்கியின் தலைவர் என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அந்த 3 துறைகளிலும், 2009-ஆம் ஆண்டு தொடங்கியே அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் நடைமுறை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலாளிகள், ஓராண்டு அடிப்படையில் தற்காலிக வேலை பயண பாஸ்- சை புதுப்பிக்க இனியும் அனுமதிக்கப்படாது என மலேசிய குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
இந்த முடிவினால் இன்னும் 9-இல் இருந்து 10 மாதங்களில் அந்த 3 துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 10,000 வர்த்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படுமென கோபாகிருஷ்ணன் கூறினார்.
கடந்த காலத்தில் இருந்தே, இந்தியர் பாரம்பரிய வர்த்தகங்களுடன் தொடர்புடைய துணை துறைகளில் வெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்தும் முடக்கத்தை அகற்றுமாறு மைக்கி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
மேலும், குறிப்பிட்ட இந்த 3 துறைகளில் உள்நாட்டவர்கள் வேலை செய்ய ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அல்லது அதற்கான வேலைத்திறனையும் கொண்டிருக்கவில்லை.
அதையடுத்து இவ்விவகாரத்திற்கு தீர்வு காண பிரதமர் தலையிடுமாறும் கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.