சுங்கை பூலோ, டிச 10 – மலேசியாவில் யாரும் வந்தேறிகள் அல்ல என கூறியதோடு நாட்டிலுள்ள பல இனங்களுக்கு இடையிலான இன, சமய வேறுபாட்டை மதித்து போற்ற வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் கூறியிருப்பது காலத்துக்கு ஏற்ற உன்னத கருத்து என மித்ராவின் சிறப்புச் செயற்குழுத் தலைவர் ரமணன் வரவேற்றிருக்கின்றார்.
மலேசியாவின் பல்லின கலாச்சார பின்னணியைத் தற்காப்பதோடு அதில் பெருமையும் கொள்வது அவசியம் என சிலாங்கூர் சுல்தான் கூறிய கருத்து மிகவும் சரியான ஒன்று. மலேசியாவின் இந்த மகத்துவத்தையும் தனித்துவத்தையும் மாற்ற நினைக்கும் சில தரப்பினரின் போக்கிற்கு சுல்தானின் இந்த கருத்து சிறந்த பதிலாகும் என்றார் ரமணன்.
இன சமய ஆட்சியாளருக்கு எதிரான விவகாரங்களை வேண்டுமென்றே எழுப்பி அரசியல் ஆதாயத்தை தேட நினைக்கின்றனர் சிலர்.
அப்படிபட்டவர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பதே அதனை களைவதற்கான சிறந்த நடவடிக்கை என சுல்தான் கூறியிருக்கிறார். அனைத்து மலேசியர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்திருக்கும் சிலாங்கூர் சுல்தானுக்கு நன்றி கூறுவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.