அலோஸ்டார், ஜன 11 – பாலிங் கம்போங் சரோக் பகோங்கில் உள்ள தமது தோட்டத்தில் காட்டுப் பன்றியை 5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு பால் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்தார். உணவு வேளையின்போது தமது தோட்டத்தில் அந்த மலைப்பாம்பு இருப்பதை 40 வயதுடைய அந்த தொழிலாளி உணர்ந்ததாக பாலிங் சிவில் தற்காப்புத்துறையின் அதிகாரி முகமட் ஃபைசோல் அஜீஸ் தெரிவித்தார். நேற்று நண்பகல் மணி 12.43 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பாம்பு காணப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
25 நிமிட நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் 40 கிலோ எடையைக் கொண்ட அந்த மலைப்பாம்பை பிடித்தனர் . அந்த மலைப்பாம்பு வனவிலங்கு பூங்காத்துறையிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தர். “Reticulated Python” எனப்படும் இந்த மலைப்பாம்பு உலகில் மிக நீளமான வகையைக் கொண்டதாகும். இந்தியாவில் நிக்கோபர் தீவுகளிலும் தென்கிழக்காசியாவிலும் அதிகமாக காணப்படும் இந்த வகை மலைப்பாம்புகள் மனிதர்கள், பூனைகள், மற்றும் இதர பாம்புகளையும் விழுங்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டது.