புக்கிட் மெர்தாஜாம், பிப் 16 – பற்றாக்குறை மற்றும் தக்காளிக்கான அதிக தேவையின் காரணத்தால், அதன் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இருப்பினும், நிலைமை இன்னும் சமாளிக்கக்கூடியதாக உள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் பினாங்கு கிளை இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி RM5 ரிங்கிட் 50 சென் ஆக இருந்தது. தற்போது ஜனவரி முதல் நேற்று வரை மாநிலத்திலுள்ள 40 சந்தைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட விலை ஆய்வுகளின் படி தக்காளி அவற்றின் அளவைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு 6 முதல் 10 ரிங்கிட் வரை விற்கப்படுவதாக அவர் கூறினார்.
சந்தைகளில் பெரும்பாலான தக்காளிகள் கேமரன் மலையிலிருந்து பெறப்படுகின்றன. அதே நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் அதன் தாக்காளியை அண்டை நாடுகளிலிருந்தும் கரிம எனும் “organic” பண்ணைகளிலிருந்தும் இறக்குமதி செய்து விற்கின்றன.
இதனிடையே, கேமரன் மலை பண்ணைகளில் இன்னும் அறுவடைக்கு தக்காளி பழுக்காத நிலையில் இருப்பதால் அதன் கையிருப்பு குறைவாக இருக்கிறது. மேலும், அதிக தேவையின் காரணமாகவும் தான் சந்தை விலையை பாதிக்கிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
இருப்பினும், சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு போக்குவரத்து நிறுவனங்கள் மீண்டும் காய்கறி விநியோகத்தைத் தொடங்கியுள்ளதால் தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கபடுவதாக பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் புகார்களுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.