
கோலாலம்பூர், ஏப் 29- முக்கிய நகரங்களில் உள்ள மேம்பாட்டுத் திட்டங்கள், பொது மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை பிரதிபலிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
வளர்ச்சி என்பது சின்னமான கோபுரங்கள் அல்லது ஆடம்பரத் திட்டங்களைப் பற்றியது அல்ல. அது மக்களை, குறிப்பாக பின்தங்கியவர்களை எவ்வளவு உயர்த்துகிறது என்பதைப் பற்றியது என்று அவர் கூறினார்.
வாங்கக்கூடிய விடுகள் உட்பட அனைத்து மேம்பாட்டு முயற்சிகள் குறித்து மாதந்திர நிலவரங்கள் மற்றும் ஆகக்கடைசி விவரங்களை வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு வழங்க வேண்டும் என இன்று முக்கிம் பத்துவில் Rumah Belia Madani திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார்.
நகர மேயர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடையே செயல்திறன் மற்றும் நேர்மையின் அவசியத்தை, குறிப்பாக திட்ட ஒப்புதல்களையும் அவர் எடுத்துரைத்தார். அவ்வப்போது, மேயர்களும் ஊராட்சி மன்றங்களும் ஒப்புதல் செயல்முறைகளை விளக்க வேண்டும்.
அவை விரைவாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார். மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்த கொள்கை 2022 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும், அதன் பலன்கள் தேவைப்படுபவர்களால் உணரக்கூடியதாக இருக்க வேண்டும என்று அன்வார் கூறினார்.