
கோலாலம்பூர், ஆக 24 – கடந்த திங்கட்கிழமை ஆக 21, ம.இ.கா தலைமையகத்தின் புது கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமய பூஜையோடு இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ முறைப்படியும் வழிபாடுகள் நடத்தப்பட்டதில் தவறில்லை என கூறியுள்ளார் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன்.
இது இக்கட்சி சமய பேதமின்றி அனைவருக்குமானது என்பதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
ம.இ.கா-வில் அனைத்து மதத்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எனவே கட்சியின் அடிக்கல் நாட்டு விழாவில் குறிப்பிட்ட ஒரு சமயத்தின் அடிப்படையில் வழிப்பாட்டை செய்வதில் முறையாக அமையாது என்ற எண்ணத்தில் அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக சரவணன் விளக்கமளித்திருக்கிறார்.
இந்து முறைப்படி மட்டும் வழிபாட்டை நடத்தினால் முஸ்லிம்களிம் கிருஸ்துவர்களும் எப்படி இதில் கலந்துக் கொள்வார்கள்? அப்படி செய்தால் அது தவறல்லாவா? இதைக் குறை கூறுபவர்கள் குறுகிய சிந்தனைக் கொண்டவர்கள் என கூறியுள்ளார் சரவணன்.
அடிக்கல் நாட்டு விழாவில், இஸ்லாமிய சமய போதகர் இஸ்லாம் முறைப்படி பிரார்த்தனை மேற்கொள்வதையும், அதே சமயத்தில் இந்து முறைப்படி வழிப்பாடுகள் செய்யப்படுவதையும், கிருஸ்துவ மதப்படி பிரார்த்தனை செய்யப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பாஸ் கட்சியின் உலாமா மன்றம் அதை தவறு என கூறியுள்ளது. சமூக ஊடகங்களில் அது கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.