ஷா அலாம், ஜன 2 – கோத்தா கமுனிங் வங்கியின் நுழைவாயிலில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வங்கியின் ஏ.டி.எம் ஷட்டர் கதவு மூடும்போது அந்த ஆடவரின் கழுத்தில் சிக்கியதால் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது. அந்த வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் இருக்கும் பகுதியில் அதன் நுழைவாயிலுக்கு முன் ஆடவர் ஒருவர் கீழே விழுந்து கிடந்ததாக இன்று காலை மணி 7.29 அளவில் வங்கியிடமிருந்து தகவல் பெற்றதாக ஷா அலாம் ஓ.சி.பி.டி துணை கமிஷனர் முகமட் இக்பால் தெரிவித்தார். அந்த ஆடவர் மது அருந்தியிருந்ததோடு திங்கட்கிழமை இரவு மணி 11.48 அளவில் வங்கியின் நுழைவாயிலில் விழுந்து கிடந்ததை அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி மூலம் தெரியவந்தது.
நள்ளிரவு மணி 12.01 அளவில் இயல்பாகவே தானியங்கி கதவான ஷட்டர் மூடிக்கொள்ளும்போது ஷட்டருக்கும் தரைக்குமிடையே அந்த ஆடவரின் கழுத்து சிக்கி கொண்டது. காலை 6 மணியளவில் அந்த கதவு இயல்பாகவே திறக்கும் ஆற்றலை கொண்டதாகும். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரிகள் அந்த ஆடவரின் உடலை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர். அவரது உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை. அதோடு அவரிடம் அடையாள ஆவணம் எதுவும் காணப்படவில்லையென்றும் முகமட் இக்பால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.