பீடோர், மார்ச்-26, பேராக், பீடோரில் உள்ள KK Mart சூப்பர் மார்கெட்டில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், கடையின் முன்புறம் வந்து விழுந்த அக்குண்டு, அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை.
அதிகாலை 5 மணியளவில் வந்த மர்ம நபர் அந்த பெட்ரோல் குண்டை அங்கு வீசி சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் நடக்கும் போது கடையின் பணியாளர்கள் சூப்பர் மார்கெட்டின் உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, KK Mart பீடோர் கிளை அது குறித்து போலீசில் புகார் செய்துள்ளது.
‘அல்லாஹ்’ என்ற வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் KK Mart-டின் சில கிளைக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டது தொடர்பில், அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியும் இன்று கோலாலம்பூரில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பீடோரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அச்சம்பவத்திற்காக KK Mart பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள போதும், அம்னோ இளைஞர் பிரிவு உள்ளிட்ட தரப்புகள் KK Mart-டுக்கு எதிரான புறக்கணிப்பு இயக்கத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.