
கோலாலம்பூர், மார்ச் 29 – 8 லட்சத்து 50,000 ரப்பர் சிறு தோட்டக்காரர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கு 200 ரிங்கிட் சிறப்பு ராயா உதவித் தொகையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
2023 வரவு செலவுத் திட்டத்தில் அத்தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உதவிகளுடன், கூடுதலாக இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மீனவர்களுக்கு மாதத்திற்கு 300 ரிங்கிட் உதவித் தொகையையும், ரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கு 3 மாதங்களுக்கு 200 ரிங்கிட் உதவித் தொகையையும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதோடு, மழைக் காலத்துக்கான உதவித் தொகையும் 600 ரிங்கிட்டிலிருந்து 800 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டது.
எனினும், இத்துறையைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலை இன்னும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு பெருநாட்கால உதவியை வழங்க இணங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.