ஷா அலாம், நவ 6- ஒரு விமான டிக்கெட்டிற்கு ஒரு கைதொலைபேசி மட்டுமே அனுதிப்பதா என மாஸ் (MAS) எனப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் மற்றும் செனாய் விமான நிலையத்திற்கு போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் வினவியுள்ளார். ஒரே கை தொலைபேசி விமான டிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் விமான நிலையத்தில் தனது தந்தை விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் அதனால் ஏற்பட்ட வேதனையை அவர் பகிர்ந்து கொண்டார். அந்த பெண்ணின் தந்தைக்கு கைதெலைபேசி கிடையாது. இதனால் அவரது டிக்கெட்டை தமது கைதொலைபேசியில் அந்த பெண் பதிவு செய்து வைத்திருந்தார். ஒரு தொலைபேசியில் இரண்டு டிக்கெட்டுகளை வைத்திருப்பதற்கு மாஸ் அனுமதிப்பதில்லையென முகப்பிட சேவையிலுள்ள அதிகாரி கூறியதைத் தொடர்ந்து வரிசையில் நின்றிருந்தபோது அப்பெண் தம்மிடம் உதவி கேட்டதாக வீ கா சியோங் தெரிவித்தார்.
ஒரு கைதொலைபேசிக்கு ஒரு ‘Boarding Pass’ எனப்படும் மின் விமான டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டால் கை தொலைபேசி இல்லாதவர்கள் அல்லது கை தொலைபேசியை பயன்படுத்த தெரியாவதவர்களின் நிலைமை எப்படியென வீ கா சியோர் கேள்வி எழுப்பினார். ஒரு கைதொலைபேசிக்கு இரண்டு e-boarding pass கொடுத்தால் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார். e-boarding pass விவகாரத்தில் செனாய் விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலயத்திற்கும் வெவ்வேறு SOP விதிமுறைகளை மாஸ் கொண்டிருப்பது ஏன் என்றும் நேற்று தமது முகநூலில் வெளியிட்ட பதிவில் வீ கா சியோங் வினவினார்.