ஜொகூர் பாரு, டிசம்பர் 11 – ஜொகூரில், மூன்றாண்டுகளுக்கு முன், முதலாளியை சிறிய மண்வெட்டியை கொண்டு வெட்டி கொலை செய்த, அந்நிய நாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும், ஜொகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று தலா 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், மரண தண்டனை அகற்றப்பட்டுள்ளதால், அதே வீட்டில் தோட்டக்காரராக பணிப்புரிந்த பார்தோலோமஸ் எனும் அவ்வாடவனுக்கு மட்டும் கூடுதலாக 12 பிரம்படிகளை நீதமன்றம் விதித்தது.
அந்த தண்டனை அவர்கள் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வருமெனவும் நீதிபதி அறிவித்தார்.
2020-ஆம் ஆண்டு, மார்ச் 17-ஆம் தேதி, பிற்பகல் மணி இரண்டு வாக்கில், செனாயிலுள்ள, தனது வீட்டில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 73 வயது லாவ் யென் நா எனும் முதியவரை, அவர்கள் சிறு மண்வெட்டியை கொண்டு கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
அதன் பின், அவருக்கு சொந்தமான தோயோதா அல்பாட் ரக வாகனத்தையும், கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு அவர்கள் கோலாலம்பூருக்கு தப்பிச் சென்றனர்.
எனினும், டாமான்சாராவிலுள்ள, உணவகம் ஒன்றில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அந்த கொலை தொடர்பான CCTV பதிவு, நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஒளிபரப்பட்டதை அடுத்து, அந்த வீட்டுப் பணிப்பெண்ணும், அவரது கணவனும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.