கோலாலம்பூர், மார்ச் 21 – ரமலான் சந்தையில் விற்கப்படும் உணவு தொடர்பில், மீண்டும் அதிருப்திகரமான பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இம்முறை, “ரொட்டி ஜோன்” உணவை வாங்கிய பெண் ஒருவர், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்த போதிலும், அணுக்கமாக ஆராய்ந்த போது தான், அந்த ரொட்டி ஜோனின் மையப் பகுதியில் துளை ஒன்று இருந்ததும், அதன் உள்ளடக்கம் மிகவும் குறைவாக இருந்ததும் தெரிய வந்ததாக அப்பெண் பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக வாங்கப்படும் ரொட்டி ஜோன், இறைச்சி, காய்கறிகள், முட்டை மற்றும் சாஸ்களை கொண்டு நிரப்பப்பட்டிருக்கும்.
எனினும், @nadiaaqilahbnl எனும் அப்பெண் வாங்கிய ரொட்டி ஜோனில், அவை காணப்படவில்லை என்பதால், அதற்கு மெனோரா சுரங்கம் அல்லது Roti John Menora Tunnel என அவர் பெயர் சூட்டியுள்ளார்.
எனினும், அப்பெண் அந்த ரொட்டி ஜோனை எந்த ரமலான் சந்தையில் வாங்கினார் என்ற விவரம் எதுவும், அவர் டிக் டொக்கில் பதிவிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்படவில்லை.
அந்த காணொளியை இதுவரை பத்து லட்சம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; எதிர்மறையான கருத்துகளும், விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
“அவர்கள் ரொட்டியை மட்டும் தான் விற்கிறார்கள். உள்ளடக்கத்தை நீங்கள் தான் சொந்தமான நிரப்பிக் கொள்ள வேண்டும்” என அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“இனி காகிதத்தால் சுற்றப்படாத ரொட்டி ஜோன்களை வாங்குங்கள். அப்பொழுது தான் அது சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிச் செய்துக் கொள்ள முடியும்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.