புத்ராஜெயா, பிப்ரவரி 20 – நாட்டிலுள்ள செய்தியாளர்களுக்கான புதிய நெறிமுறைகளை, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
35 ஆண்டுகளுக்கு முன் 1989-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, செய்தியாளர்களுக்கான முந்தைய நெறிமுறைகளுக்கு மாற்றாக, இந்த புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நெறிமுறை எட்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பொறுப்பு, வெளிப்படைத் தன்மை, நியாயமான போக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இன்மை, உண்மையான அல்லது நம்பகத்தன்மை கொண்ட தகவல்களை வழங்குவது, தனி உரிமை பேணல், ஊடக சட்ட திட்டங்களை புரிந்து கொள்வது, திறனுக்கு முன்னுரிமை ஆகியவையே அந்த எட்டு அம்சங்கள் ஆகும்.
செய்தியாளர்களின் சுதந்திரத்தை உறுதிச் செய்யும் நோக்கில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் அந்த நெறிமுறைகள் வரையப்பட்டதாக பாஹ்மி சொன்னார்.
எனினும், போலி செய்திகளை வெளியிட எந்த ஒரு தனிநபருக்கோ, அமைப்புக்கோ ஒருபோதும் அனுமதி இல்லை என்றாரவர்.
எனவே, செய்தியாளர்கள் தொடர்ந்து நம்பகத்தன்மை கொண்டு செய்திகள் அல்லது தகவல்களை. மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த நெறிமுறைகள் உந்துதலாக அமையுமென பாஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.
2023 எல்லைகள் அற்ற நிருபர்கள் – ஊடக சுதந்திர குறியீட்டில் மலேசியா, 180 நாடுகள் பட்டியலில் 73-வது இடத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிய பாஹ்மி, மலேசியாவின் ஊடக சூழல் தனித்துவமானது, மேற்கத்திய ஊடக பாணியை பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.