கோலாலம்பூர், பிப் 1 – செப்பாங் அனைத்துலக கார் பந்தய தளத்தில் மீண்டும்
ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியை நடத்துவது தொடர்பில் பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லையென பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் பிரசித்தி பெற்றஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயப் போட்டி மீண்டும் மலேசியாவில் நடைபெறும் என அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை தொடர்ந்து பெட்ரோனாஸ் இந்த விளக்கத்தை தெரிவித்திருக்கிறது. செப்பாங் அனைத்துலக பெட்ரோனாஸ் பந்தய தளத்தில் மீண்டும் இப்போட்டியை நடத்துவது தொடர்பாக எந்தவொரு பேச்சும் நடத்தப்படவில்லையென பெட்ரோனாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
1999 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் நடத்தப்பட்ட பார்மூலா ஒன் கார் பந்தயப் போட்டி டிக்கெட் விற்பனை சரிவு மற்றும் ஏற்பாட்டுக்கான செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து 2017 ஆண்டு நிறுத்தப்பட்டது. எனினும் கிரேன்பிரி மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் இதர மோட்டார் சைக்கிள் போட்டிகளை நடத்துவதற்கு சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.