கோலாலம்பூர், பிப் 26 – பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக பெர்கெசோ சுகாதார பரிசோதனை திட்டத்தை தொடங்கியது. அந்த முயற்சி தொழிலாளர் சமூகத்தின் உடல்நிலையின் உண்மை நிலையை வெளிப்படுத்தியது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிவதற்கு உதவியது. 2013ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரைக்குமான முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே நீரிழிவு நோய்க்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 2022 ஆம் ஆண்டில் புள்ளி விவரங்கள் 14 விழுக்காடு உயர்ந்தது.
2023ஆம் ஆண்டு நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்து ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. நீரிழிவு , உடல் பருமன் மற்றும் மிக முக்கியமாக சிறுநீரக நோயைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்தில் பெர்கெசோ தோலா குல பிரச்சாரத்தை தொடங்கும். இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் சிறுநீரக சுகாதார பிரச்சினைகளு காரணமாக இருக்கும அம்சங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதாக பெர்கெசோ குழுமத்தின் தலைவர் டாக்டர் முகமத் அஸ்மன் அஜிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.