பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 – சுங்கே வேயில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ‘போர்டிங் பாஸ்’ வடிவில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் நபர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
26 வயதுடைய அந்த சந்தேக நபரின் சொகுசு குடியிருப்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் RM 406,309 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இரவு 10:40 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைவர் ஏ.சி.பி ஷாருல் நிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.
அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, ‘போர்டிங் பாஸ்’ வடிவடித்தில் அச்சிடப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதே இவர்களின் நூதனமான போதைப்பொருள் விநியோகிப்பு முறையாகும் என ஷாருல் நிஜாம் சுட்டிகாட்டினார்.
நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளுடன் சில மருந்துகளைப் பதப்படுத்தும் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
அத்துடன் RM320 ரிங்கிட் மற்றும் RM 2,500 மதிப்புள்ள ஆப்பிள் ஜ.பேட் கைப்பற்றப்பட்டதாகவும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் அந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.