செமினி, பிப் 3 – இன்று அதிகாலையில் சிலாங்கூரில் ஸ்ரீ கெம்பாங்கன் பாசார் போரோங் மொத்த சந்தையில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 72 இந்திய பிரஜைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது அங்குள்ள கால்வாய்க்குள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒளிந்துகொண்டிருந்த 2 வங்காளதேச தொழிலாளர்களும் பிடிபட்டனர். அந்த நடவடிக்கையின்போது 504 ஆடவர்கள் மற்றும் 26 பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக அந்த சோதனையில் பங்கேற்ற சிலாங்கூர் குடிநுழைவு இயக்குனர் கைர்ருல் அமினஸ் கமாருதீன் தெரிவித்தார்.
அவர்களில் மியன்மாரைச் சேர்ந்த 277 பேர், 94 வங்காளதேசத்தவர்கள், 39 இந்தோனேசியர்கள், 15 நேப்பாளியர்கள், 9 இலங்கையர்கள், ஆறு பாகிஸ்தானியர்களும் அடங்குவர். இன்று காலையில் 6 மணியளவில் முடிவடைந்த அந்த நடவடிக்கையில் கைதானவர்களின் ஆவணங்களை பரிசோதிக்கும் நடைமுறைக்கு பின்னரே எத்தனை பேர் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற எண்ணிக்கை அறிவிக்கப்படும். நாட்டிலுள்ள வெளிநாட்டினர் முறையான ஆவணங்களை கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கைர்ருல் அமினஸ் தெரிவித்தார்.