தெலுக் இந்தான், மார்ச்-15 – பேராக் தெலுக் இந்தானில் கணவன் மனைவியிடம் இருந்து 32,000 ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற 2 சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்.
கடந்த வாரம் ‘Jalan Changkat Jong’-கில் உள்ள வாடகை வீட்டொன்றின் அறையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவு உணவகத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது அத்தம்பதி கொள்ளையிடப்பட்டனர்.
ஆயுதம் இல்லாத இரு கொள்ளையர்கள் மிரட்டி அறைக் கதவைத் திறக்க அவர்கள் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
உயிர் பயத்தில் அத்தம்பதி கதவைத் திறந்து விட, உள்ளே நுழைந்த இருவரும் அறை முழுவதும் தேடி, துணிப் பையில் இருந்த 32 ஆயிரம் ரிங்கிட்டை எடுத்துக் கொண்டனர்.
அது அத்தம்பதியின் சேமிப்புப் பணம் எனக் கூறப்படுகிறது.
ரொக்கத்தோடு கம்பி நீட்டும் போது 48 வயது கணவனையும் காருக்குள் இழுக்க கொள்ளையர்கள் முயன்ற போது, அவர்களிடம் இருந்து அவர் தப்பிடித்து ஓடியிருக்கிறார்.
அவருக்கும், 41 வயது மனைவிக்கும் அச்சம்பவத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த CCTV பதிவில் இருக்கும் காட்சிகளைப் பார்த்தால், இரு கொள்ளையர்களும் 30 வயது மதிக்கத்தக்க, சற்று உடல் பெருத்த ஆடவர்கள் என தெரிவதாக போலீஸ் கூறியது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் போலீசைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.