புத்ரா ஜெயா, பிப்ரவரி-27, கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மலேசியர்களுக்கு உதவியமைக்காக, அந்நாட்டரசுக்கு மலேசியா நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மலேசியா வந்துள்ள கம்போடியப் பிரதமர் Hun Manet-டிடம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் நன்றி பாராட்டினார்.
புத்ரா ஜெயாவில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் அதனைக் கூறினார். இணைய மோசடிகளால் ஏற்படும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள, வட்டார அளவிலான கடப்பாடும், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட ஒத்துழைப்பும் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான அச்சந்திப்பின் போது மறு உறுதிபடுத்தப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்டில் கம்போடியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட Hun Manet-டின் முதலாவது அதிகாரத்துவ மலேசியப் பயணம் இதுவாகும்.
வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏராளமான மலேசியர்கள் கம்போடியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அண்மையக் காலமாக அதிகரித்து வருகின்றன.
‘கவர்ச்சிகரமான’ சம்பளத்திற்கு ஆசைப் பட்டு அவர்கள் மோசடி கும்பல்களின் பிடியில் சிக்கிக் கொள்வதும், பின்னர் அரசாங்கம் பேச்சு நடத்தி அவர்களை மீட்பதுமாக இருந்து வருகிறது.
வெளிநாடுகளில் அவ்வாறு சிக்கிக் கொண்ட மலேசியர்களை மீட்க ஒரு விரிவான தகவல் தொடர்புத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.