கோலாலம்பூர், பிப்ரவரி 21 – பொது மக்களுக்கு தொல்லைக் கொடுத்ததாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக் கோரும் ‘வைரல் இன்பெக்ஸ்டர்’ ஷீலாவின் மனு மீதான முடிவு மார்ச் 20-ஆம் தேதி தெரிய வரும் என கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் அல்லது சுருக்கமாக ஷீலா என்றழைக்கப்படும் தனது கட்சிக்காரர் நேற்று சட்டத் துறை அலுவலகத்திடம் அம்மனுவைச் சமர்ப்பித்ததாக, வழக்கறிஞர் எம்.மனோஹரன் கூறினார்.
தமக்கெதிரான குற்றச்சாட்டு வலுவில்லாத மற்று அடிப்படையற்ற ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டி ஷீலா அம்மனுவை தாக்கல் செய்திருப்பதாக அவரின் வழக்கறிஞர் சொன்னார்.
20 பக்க அம்மனுவை ஆராய தங்களுக்கு 3 வாரங்கள் வரையாவது தேவை என அரசு தரப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்ததை அடுத்து, மேஜிஸ்திரேட் மார்ச் 20-ஆம் தேதியை நிர்ணயித்தார்.
வலுவற்ற குற்றச்சாட்டு என்பது ஒரு புறமிருக்க, வைரலான சம்பவத்தில் உண்மையில் தாம் தான் பாதிக்கப்பட்ட தரப்பு என கட்சிக்காரர் கருதுவதால், அம்மனுவை அவர் சமர்ப்பித்திருப்பதாக மனோஹரன் கூறினார்.
தாம் வைரல் ஆனதற்கு காரணமான அச்சம்பவம் தொடர்பில் கடந்தாண்டு நவம்பர் 8-ம் தேதி ஷீலா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஜூன் மாத வாக்கில் பிரிக்ஃபீல்ட்சில் உள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கோபத்தில் கார் ஹார்னை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்து தொல்லைக் கொடுத்ததோடு, பொது மக்களில் ஒருவரிடம் கத்தி கூச்சல் போட்டதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், அக்குற்றச்சாட்டுகளை மறுத்து ஷீலா விசாரணைக் கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் 268-வது பிரிவின் கீழ் அவருக்கு 400 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.