கோலாலம்பூர், டிச 14 – மலேசியாவில் மலாய்க்காரர் அல்லாதார் பிரதமராக வருவதற்கு சட்ட ரீதியில் தடையில்லையென வழக்கறிஞர் ஹனிஃப் காத்ரி அப்துல்லா தெரிவித்திருக்கிறார். எனினும் இந்த ஆலோசனைக்கு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மலாய்காரர்களின் நிலை பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சுவதே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார். மலாய்காரர்கள் அல்லாதார் பிரதமராக வந்தால் கூட்டரசு அரசியலமைப்பு சட்டடத்தில் இடம்பெற்றுள்ள நான்கு முக்கிய அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் பயப்படுகின்றனர்.
குறிப்பாக கூட்டரசின் முக்கிய சமயமான இஸ்லாத்தின் நிலை, தேசிய மொழி என்ற மலாய் மொழியின் நிலை, மலாக்கக்காரர்களின் சிறப்பு உரிமை மற்றும் ஆட்சியாளர்களின் சிறப்பு நிலை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த நான்கு அம்சங்கள் குறித்து பெரும்பான்மையினர் அடிக்கடி கவலை அடைகின்றனர் என ஹனிஃப் தெரிவித்தார். உண்மையில் இப்படிப்பட்ட அச்சம் தேவையற்ற ஒன்று என யூடியுப் “MalayaDailyCom”-மிற்கு காணொளி வாயிலாக ஹனிஃப் தெரிவித்தார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 159 பிரிவை அவ்வளவு எளிதில் திருத்தம் செய்யமுடியாது என்பதை பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லையென அவர் கூறினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 159 ஆவது உட்பிரிவு (5) ஆட்சியாளர் மாநாட்டில் நிறைவேற்றப்படுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதையும் ஹனிஃப் தெரிவித்தார்.