கோலாலம்பூர், பிப் 15 – அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கிடையிலான பேச்சுக்கான கதவு மூடப்பட்டு விட்டது. இனிமேல் அவ்விரு கட்சிக்கிடையிலான பேச்சுக்கள் மற்றும் உடன்பாட்டிற்கான சாத்தியம் எதுவும் இல்லையென அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி தெரிவித்திருக்கிறார். அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கான எந்தப் பேச்சுக்கும் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் எதிர்க்கட்சி அணியில் இருந்தபோது, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முஃபாகாட் நேஷனல் உடன்பாடு உருவானது. பாஸ் கட்சி குறித்து அம்னோவுக்கு நன்கு தெரியும். மேலும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது மிகவும் வசதியானது என்றும் பாஸ் கருதுவதாக புவாட் தெரிவித்தார். பாஸ் கட்சிக்கும் அம்னோ தலைவர்களுக்குமிடையிலான பேச்சுக்கள் நடைபெறும் என்பதோடு இதன் வழி அவ்விரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படும் என நேற்று பாஸ் ஆன்மீக ஆலோசகர் ஹாஷிம் ஜாசின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.