
மூவார், அக் 3- வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூவார்
தாமான் பெர்வீராவிலுள்ள தமது வீட்டிற்கு வெளியே உள்ள கார் நிறுத்துமிடத்தில் நேரடியாகவும் அல்லது இணையம் வாயிலாகவும் குறைந்த கட்டணத்தில் கே. மஹாலெட்சுமி டியூசன் வழங்கி வருகிறார். பல இனங்களையும் சேர்ந்த மாணவர்களுக்காக 20 வயதுடைய மஹாலெட்சுமி இந்த சேவையை வழங்கி வருகிறார். மென்மையான வெள்ளை பலகை, பழைய விவேக கைதொலைபேசி, ஆகியவற்றின் உதவியோடு ‘Gogle Meet’ மூலமாகவும் நேரடியாகவும் மஹாலெட்சுமி இந்த சேவையினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இஸ்லாமிய வரலாறு உட்பட பல பாடங்களை எஸ்.டி.பி.எம் (STPM) தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் டியூசன் வழங்குகிறார். தமது குடும்பத்திற்கு பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் ஒரு மாதத்திற்கு 20 ரிங்கிட் கட்டணத்திற்கு மகாலெட்சுமி டியூசன் சொல்லிக் கொடுப்பது மற்றவர்களுக்கு உதவும் அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது.
குறிப்பாக இஸ்லாமிய வரலாறு பாடத்தில் தமக்கு அதிக ஆர்வம் இருப்பதால் அந்த பாடத்திற்கு டியூசன் வழங்குவது குறித்தும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டார். இவ்வாண்டு எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதும் 8 மாணவர்களை தாம் தயார்படுத்தி வருவதாகவும் 20 ரிங்கிட் வழங்கினால் கூட பரவாயில்லை என அந்த மாணவர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். வெகு விரைவில் கெடாவிலுள்ள UUM பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேம்பாட்டு கல்வித்துறையில் பட்டப்படிப்பை தொடரவிருக்கும் அவர் 20 வெள்ளி டியூசன் கட்டணம் சின்ன சின்ன செலவுக்கு பயன்படும் என கூறுகிறார். விபத்தின் காரணமாக மாற்றுத் திறனாளியாக இருந்த தமது கணவர் 2019 ஆம் ஆண்டு காலமாகிவிட்டதால் தற்போது அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில் பகுதி நேரமாக வேலை செய்து வருவதாக மஹாலெட்சுமியின் தாயாரான 55 வயதுடைய வி.தெய்வானை தெரிவித்தார். மஹாலெட்சுமி வரலாற்று ஆசிரியராக வருவார் என்று தாம் நம்பிக்கையோடு இருப்பதாகவும் தெய்வானை கூறினார்.