கோலாலம்பூர், நவ 27 – மலேசியாவில் நாள் ஒன்றுக்கு சராசரி எண்மர் எச்.ஐ.வி கிருமியின் பாதிப்புக்கு உள்ளாகுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார். புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவுவதால் 2030 ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி – எய்ட்ஸ் (HIV – AIDS) நோயை முடிவுக்குக் கொண்டுவரும் நாட்டின் இலக்கைத் தடம் புரளச் செய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுவாக, 2000 ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டுக்கிடையே புதிய நோய்த்தொற்றுகளை 50 விழுக்காடு வரை குறைப்பதில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் 2010 ஆம் ஆண்டு தொடங்கி 2022 ஆம் ஆண்டுக்கிடையே நோய்த்தொற்றுகள் குறைவதற்கான விகிதம் 24 விழுக்காடு குறைந்து வருகிறது.
சராசரியாக, ஆண்டுதோறும் மொத்தம் 3,000 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகின்றன. மேலும் இது 2030க்குள் எச்.ஐ.வி -எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டை அடைவதில் மலேசியாவின் திறனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பாரிட் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் இஸ்மி மட் தாயிப் வினவிய எழுத்துப் பூர்மான கேள்விக்கு பதில் அளித்தபோது டாக்டர் ஸாலிஹா தெரிவித்தார்.