
அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 31 – ஆலோங் (along) எனும் வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி சூதாடும் அளவுக்கு சூதாட்டத்தின் மீது மோகம் கொண்ட மாது ஒருவர், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, தனது உறவினரின் நகைகளைத் திருடியுள்ளார்.
அம்பாங் ஜெயாவிலுள்ள தாமான் அம்பாங் மேவா (Taman Ampang Mewah)-வில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்த 77,500 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயிருப்பதாக 64 வயது மூதாட்டி போலீசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணையைத் தொடக்கிய போலீசார், நகைகளைத் திருடியது மூதாட்டியின் உறவுக்கார பெண் தான் என்பதைக் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து, அந்த 40 வயது உறவுக்கார பெண்ணைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகளின் ஒரு பகுதியை மீட்டிருப்பதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாருக் எஷாக் (Mohamad Farouk Eshak) கூறியுள்ளார்.
நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்ட அம்மாது, நகைகளை விற்று கிடைத்த பணத்தை ஆலோங்கிடம் வாங்கியக் கடனைக் கொடுப்பதற்கும் சொந்தச் செலவுக்கும் பயன்படுத்தியிருப்பதாக, போலீஸ் விசாரணையின் போது தெரிவித்திருப்பதாக, முகமட் ஃபாருக் சொன்னார்.