பினாங்கு, ஜன 29 – சுங்கை பெராய் குறுக்கே 600 மில்லிமீட்டர் நீர்க்குழாயைச் சரி செய்வதற்காக இன்று திங்கட்கிழமை தொடங்கவிருந்த நீர் விநியோகத் தடை, நாளை 30 ஜனவரி செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணிக்குத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக கழகம் PBAPP தெரிவித்துள்ளது.
“இதனை செயல்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, போதுமான தண்ணீரை சேமிக்க அவர்களுக்கு நேரம் வழங்குவதற்கு இந்த முடிவு கொண்டுவரப்பட்டது” என PBAPP கூறியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை சுங்கை பெராய் அடிப்பகுதியில் உள்ள 1,350 மில்லிமீட்டர் குழாயில் பெரிய அளவில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் மூன்றாவது முறையாக தடைப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அவற்றை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், குழாயில் இன்னமும் கசிவு நீடிப்பதாகவும், அதை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் வரை மீண்டும் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.