கோலாலம்பூர், மார்ச் 15 – ஹரிமாவ் மலாயாவிற்கும், கலைநிகழ்ச்சிகளுக்கும் தனித் தனி அரங்குகளை கட்ட அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
அது போன்ற பிரத்தியேக அரங்குகளை கட்ட அரசாங்கத்தால் இயலாது.
ஆகையால், ஒரே சமயத்தில் 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதிகளை கொண்ட புக்கிட் ஜாலில் அரங்கின் பயன்பாட்டை நடுநிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவ் தெரிவித்தார்.
தற்சமயம், புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம், காற்பந்தாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் வேளை ; அங்கு அனைத்துலக இசைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
எனினும், அண்மையில் நடந்து முடிந்த கோல்ட்பிலே மற்றும் எட் ஷுரனின் கலைநிகழ்ச்சிகளால் புக்கிட் ஜாலில் அரங்கம் மோசமாக சேதமடைந்ததால், ஹரிமாவ் மலாயா பங்கேற்கவிருந்த ஆட்டம் பாதிக்கப்பட்டதுடன், அது தேசிய காற்பந்து இரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
புக்கிட் ஜாலில் அரங்கம் தொடர்ந்து இரு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுமென தெரிவித்த ஹன்னா, விரைவில் ஷா ஆலாம் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டவுடன், அந்த பிரச்சனைக்கு அது தீர்வாக அமையலாம் என்றார்.