ஷா ஆலம், பிப் 1 – இளம் பெண் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவனை கைது செய்ய முயன்ற போலீஸ்காரர்களை பாராங் கத்தியால் தாக்க முயன்றதால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான் . இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்டாலிங் ஜெயாவில், சுங்கை வேயில் கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கடுமையான காயத்திற்கு உள்ளான 19 வயது பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சந்தேகப் பேர்வழியை தேடி தாமான் புக்கிட் சுபாங் அடுக்கு மாடி வீட்டிற்கு நேற்று போலீசார் சென்றபோது அந்த நபர் பாராங் கத்தியினால் போலீஸ்காரர்களை தாக்க முயன்றதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி தங்களின் தற்காப்புக்காக போலீசார் அந்த சந்தேகப் பேர்வழியை நோக்கி சுட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானதாக அவர் கூறினார். சம்பவம் நிகழ்ந் இடத்திலேயே அந்த நபர் மரணம் அடைந்தான். குற்றவியல் சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ் கொலை செய்ய முயன்றதாக இந்த விவகாரம் வகைப்படுத்தப்பட்டதாக ஹுசைன் விவரித்தார். மேலும் அந்த சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய 28 சென்டிமீட்டர் நீளமுள்ள பாராங் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.