Latestமலேசியா

விடைபெற்றார் சிவகுமார்; தாயாருடன் உடல் தகனம்; இரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கிள்ளான், ஏப்ரல்-27- இரசிகர்களை திடீர் சோகத்தில் ஆழ்த்தி விட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன்.

நேற்று முன்தினம் திடீர் மரணமுற்ற சிவகுமார் மற்றும் அவரின் தாயார் தமிழரசியின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு சிலாங்கூர் கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசா ஜெயாவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் நடைபெற்றன.

உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கலையுலகினர், இரசிகர்கள் என திரளானோர் வந்து சிவகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அனைவரிடமும் சிரித்துப் பழகக்கூடியவரான சிவகுமாரின் மறைவை பலராலும் இன்னும் நம்ப முடியாமலிருப்பதை, இறுதிச் சடங்கில் காண முடிந்தது.

இறுதிச் சடங்கு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இருவரின் உடல்களும் பிற்பகல் 2 மணிக்கு சிம்பாங் லீமா இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.

48 வயது சிவகுமார், 76 வயது அவரின் தாயாருடன் கோலாலம்பூர் ச்செராஸ், தாமான் டேசா பெட்டாலிங் அடுக்குமாடிக் குடியிருப்பில் முன்னதாக இறந்துகிடந்தார்.

இருவரும் 11-ஆவது மாடியிலியிருந்து குதித்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, ச்செராஸ் போலீஸ் கூறியது.

அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

என்றாலும் மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2006 ஆஸ்ட்ரோ பாடல் திறன் போட்டியின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமான சிவகுமார், தனது திறமையால் குறுகியக் காலக்கட்டத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவரின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!