ஈப்போ, பிப் 26 – தைப்பிங்கைச் சேர்ந்த குடும்ப மாது ஒருவர் தொலைபேசி மோசடிக் கும்பலிடம் 181, 650 ரிங்கிட்டை பறிகொடுத்திருப்பதை பேரா போலீஸ் தலைவர் Yusri Hassan Basri தெரிவித்தார். பிப்ரவரி 21 ஆம் தேதி ஆடவர் ஒருவரிடமிருந்து 55 வயதுடைய அந்த மாது தொலைபேசி அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார். தமது பெயருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள பொட்டலத்தில் மூன்று அடையாளக் கார்டுகள், இரண்டு ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் மூன்று கடப்பிதழ்கள் இருப்பதாக அந்த மாதுவுக்கு தெரிவித்த அடையாளம் தெரியாத நபர்கள் பிறகு போலீஸ் அதிகாரி என்று அடையாளம் கூறிக்கொண்ட மற்றொரு நபரிடம் பேசும்படி கூறியுள்னனர்.
அந்த மாது தமது வங்கிக் கணக்கை சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைக்காக 150,000 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்திருப்பதாக கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளார். விசாரணைக்காக தமது வங்கியில் இருக்கும் அனைத்து சேமிப்பு பணத்தையும் அனுப்பிவைக்கும்படியும் அப்பணத்தை பரிசோதித்த பின்னர் அவை திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டதைத நம்பி அந்த பெண்மணி நான்கு வங்கியிலுள்ள தமது சேமிப்பு கணக்கிலிருந்து 181,650 ரிங்கிட்டை 20 முறை பட்டுவாடா செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த மாது சனிக்கிழமையன்று போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Yusri தெரிவித்தார்.