கோலாலம்பூர், ஜன 11 – நாட்டில் 5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக்கொண்டுள்ளார். மலேசியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலையில்லாமல் இருப்பதாக Papsma எனப்படும் மலேசிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தேசிய சங்கங்களின் தலைமை செயலாளர் சுகுமாறன் நாயர் தெரிவித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ புகார் கிடைத்தால் தமது அமைச்சு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என விஸ்மா கியுபெக்ஸ்ஸிற்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸ்டீவன் சிம் கூறினார்.
ஆதாரங்களும் உண்மையும் இருக்குமானால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிகாரப்பூர்வமாக புகார் செய்யும்படி தாம் கேட்டுக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார். இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவோர் அது தொடர்பான ஆதாரத்தையும் தெரிவிக்க வேண்டும். எந்த வொரு ஆதாரத்தையும் பெறுவதற்கு நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம் என அவர் கூறினார். இதனிடையே வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான நடப்பு சட்டத்தை மேம்படுத்துவதற்கும் புதிய விமுதிறைகளை ஆராய்வது தொடர்பில் இம்மாதம் 16 ஆம் தேதி உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயிலை சந்திக்கப் போவதாக ஸ்டீவன் சிம் கூறினார்.