தோக்கியோ, டிசம்பர் 9 – ஜப்பானில் மர்மமான முறையில் மடிந்த ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவை பெரும்பாலும் “சாடீன்” அல்லது கானாங்கெளுத்தி மீன்கள் ஆகும்.
நேற்று, ஹொக்கைடோவின் வடக்கே உள்ள பிரதான ஹகோடேட் கடற்கரையில், சுமார் அரை மைல் தூரத்திற்கு அவை கரை ஒதுங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
அவ்வளவு மீன்கள் மடிந்து கிடந்ததை இதுவரை தாங்கள் கண்டதில்லை என உள்ளூர் மக்கள் சிலர் கூறியுள்ளனர்.
அந்த மீன்கள் மடிந்ததற்கான உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை.
எனினும், பிராணவாயு பற்றாக்குறையால் அவை இறந்திருக்கலாம் அல்லது இடம்பெயர்வின் போது குளிர்ந்த நீரில் சிக்கியதால் அவை கூட்டமாக மடிந்திருக்கலாம் என நம்பப்படுவதாக, ஹகோடேட் மீன்வள நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அதனால், அந்த மீன்கள் மடிந்ததற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த மீன்கள் மடிந்ததற்கும், புக்குஷிமா அணு ஆலை நீர் கடலில் விடப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் ஆருடங்களும் தலைதூக்கியுள்ளன.