ஜோர்ஜ் டவுன், ஜனவரி 10 – பினாங்கில், சமூக ஊடகங்களில், போலி முத்திரைகளை கொண்ட ஆடைகளை விற்பனை செய்து, நாள்தோறும் ஆயிரம் ரிங்கிட் வரையில் இலாபம் ஈட்டி வந்த ஆடவன் ஒருவன், உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று மாலை மணி மூன்று வாக்கில், ஆயிர் இத்தாமிலுள்ள, PPR மக்கள் வீடமைப்புப் பகுதியில் அவன் கைதானான்.
சம்பந்தப்பட்ட PPR குடியிருப்பிலுள்ள, வீடொன்றை, அந்த 27 வயது ஆடவன், போலி முத்திரைகளை கொண்ட துணிகள் அல்லது ஆடைகளை வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, பினாங்கு உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சின், நடவடிக்கை பிரிவு தலைவர் ஏ. மோகன் தெரிவித்தார்.
அதோடு, அவ்வாடவனிடமிருந்து, சுமார் நாற்பதாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள, ஐயாயிரத்துக்கும் அதிகமான, பல்வேறு போலி முத்திரைகளை கொண்ட ஆடைகள் அல்லது துணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மோகன் தெரிவித்தார்.
கோலாலம்பூரிலிருந்து அந்த ஆடைகளை வாங்கி, டிக் டொக் வாயிலாக அவன் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு, முத்திரை சட்டத்தின் கீழ், அவனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.