ஈப்போ, நவம்பர் 29 – கம்போங் காஜாவிலுள்ள, பேராக் தெங்ஙா நிர்வாக அலுவலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்ட நான்கு சிறுவர்களின் பெற்றோர் என நம்பப்படும் இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், இம்மாதம் 24-ஆம் தேதி, கம்போங் காஜா சமூநலத் துறை செய்த புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவ்விருவரும் தனித் தனியே கைதுச் செய்யப்பட்டதாக, பேராக் தெங்ஙா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹபெசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவன், கடந்த திங்கட்கிழமை கைதுச் செய்யப்பட்ட வேளை ; பெண் நேற்று கைதானதையும் ஹபெசுல் உறுதிப்படுத்தினார்.
2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதம் 24-ஆம் தேதி, பேராக் தெங்ஙா நிர்வாக அலுவலகத்தின் பாதுகாப்பு முகப்புக்கு முன், பத்து மாதம் முதல் 11 வயதுக்கு உட்பட்ட நான்கு சிறுவர்கள் கைவிட்டுச் செல்லப்பட்டனர்.
காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்நால்வரையும் அங்கு இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.