ஜித்ரா, பிப் 23 – ஜித்ராவுக்கு அருகே ஜாலான் கம்போங் புக்கிட் கேச்சிக் சாங்லுனில் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ராணுவ டிரக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தோடு மேலும் ஐவர் காயமடைந்தனர். நேற்று மதியம் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அழைப்பு வந்ததாக குபாங் பாசு போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி சியென் சுங் தெரிவித்தார். புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படைப்பிரிவின் 5ஆவது முகாமில் பணியில் இருந்த 29 வயது ராணுவ வீரர் ஓட்டிச் சென்ற டிரக் கப்பாளா பத்தாஸ் வதனியா முகாமில் இருந்து பெர்லிஸ், புக்கிட் கெளடர் முகாமிலுள்ள 30ஆவது படைத் தலைமையகத்தை நோக்கிச் சென்றபோது விபத்திற்குள்ளானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில், டிரக் கட்டுப்பாட்டை இழக்கும் முன் எதிரே வந்த காரைத் தவிர்த்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
குறுகிய சாலை மற்றும் செப்பனிடப்படாத சாலை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் சாலையை விட்டு செம்பனை தோட்டத்திற்குள் நுழைந்தது. டிரக்கின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பயணிகளில் ஒருவர் பலத்த காயம் அடைந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார். காயமடைந்த ஒருவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் நால்வர் அலோஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக சியென் தெரிவித்தார்.