கோலாலம்பூர், டிச 4 – கோவிட் 19- தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதோடு ,புதிய வைரஸ் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் கூட்டம் நெரிச்சலாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
2021ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் புலனத்தில் வெளியான குரல் பதிவு பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகள் நிறைந்து காணப்படுவதாகவும் அவர்களுக்கு படுக்கைகள் இல்லையென்றும் அந்த வாட்ஸ்அப் தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பரவிய புதிய வைரஸ் காரணத்தினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஆடவர் ஒருவரின் குரல் பதிவில் கேட்க முடிகிறது.
சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த பொய்யான அறிக்கையை பரப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது . அதே வேளையில் கோவிட்-19 பரவி வரும் நிலையில் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.