
ஷா ஆலாம், ஏப்ரல்-20, சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வரும் 500-க்கும் மேற்பட்டோர், இன்று காலை அங்குக் ஒன்றுக்கூடி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தங்களின் கேள்விக்கான விளக்கத்தைப் பெறவும் மகஜரில் கையொப்பமிடவும் ஏதுவாக, காலை 10 மணிக்கு தாமான் ஸ்ரீ மூடா மக்கள் ஒன்றுகூடினர்.
அடை மழை வரும் போதெல்லாம் வெள்ளப் பிரச்னையால் நாங்கள் அவதிப்படுகிறோம்; எனவே இதற்கு என்னதான் தீர்வு என்பது தெரிந்தாக வேண்டுமென, அவர்கள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.
அதிகாரத் தரப்பு 14 நாட்களில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உரியத் தீர்வை அறிவிக்க வேண்டும் என, தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளரும் சமூக ஆர்வலருமான உமாகாந்தன் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் ஶ்ரீ மூடாவுக்கு வந்து தனது தரப்பு விளக்கத்தை வழங்கினார். நீண்டகால தீர்வாக 100மில்லியன் ரிங்கிட் செலவில் வெள்ள தடுப்பு திட்டத்தை மேற்கொள்ள பாக்காத்தான் ஹராபான் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இன்றைய அச்சந்திப்பு முடிந்த கையோடு, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மந்திரி பெசாரிடம் மகஜரை வழங்க சுமார் 50 பேர் பேருந்தில்பேராக், ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்குப் பயணமாகினர்.
அவரை நேரில் சந்தித்து வெள்ளப் பிரச்னைக்குரியத் தீர்வுக்கான பதிலைக் கேட்பதே அதன் நோக்கமென உமாகாந்தன் கூறினார்.
ஏப்ரல் 11-ஆம் தேதி அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டு 700 வீடுகள் பாதிக்கப்பட்டதாக முன்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது