கோலாலம்பூர், ஏப் 12 – கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் 3 ஆம் நிலை வார்டை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஆராயும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad இந்த விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவார் என்றும் அன்வார் கூறினார். மூன்றாம் நிலை வார்டு நெரிச்சலாகவும் அடைபட்டதைபோல் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த விவகாரத்தை அமைச்சர் Dzulkefly அமைச்சரவைக்கு கொண்டுவந்தால்தான் தேவையான நடவடிக்கையை நாம் விரைந்து எடுக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். இதர அவசர விவகாரங்களில் அமைச்சரும் , கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் இயக்குநரும் கலந்துகொள்ள வேண்டியிருந்தாலும் அடிப்படை வசதிகள் சிறப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அமைச்சும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அன்வார் கூறினார்.
கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் மூன்றாம் நிலை வார்டிலுள்ள நோயாளிகளை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். பிரதமரின் துணைவியார்Datuk Seri Dr Wan Azizah Wan Ismail, Dzukefly மற்றும் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் இயக்குநர் Dr Rohana Johan ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மருந்துகள் கொள்முதலுக்கான முழுமையான ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான செலவுகளும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார். விரயம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரமும் சிறந்ததாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.