
மோஸ்கோ, செப்டம்பர் 15 – ரஷ்யாவுக்கான இரு அமெரிக்க தூதர்களை, Persona non Grata அல்லது “வேண்டத்தகாதவர்கள்” என மோஸ்கோ அறிவித்துள்ளது.
அதனால், அவர்கள் ஏழு நாட்களில் ரஷ்யாவிலிருந்து வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சின் அகப்பக்கத்தில், அந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த இரு அமெரிக்க தூதர்களும், ரஷ்ய உள்விவகாரத்தில் தலையிட்டதாக, குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அதோடு, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தும் வகையில், இரகசிய தகவல்களை பெறுவதற்காக அவர்கள் ரஷ்ய உளவாளி ஒருவரை பணியில் அமர்த்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட்டு மாதம் இறுதியில், விலாடிவொஸ்டொகிலுள்ள (Vladivostok), அமெரிக்க தூதரகத்திலிருந்து, ரஷ்யாவின் முன்னாள் பணியாளர் ஒருவரை, அந்நாட்டு FSB இரகசிய சேவை அதிகாரிகள் கைதுச் செய்தனர்.
உக்ரேனில், ரஷ்யா பயன்படுத்தும் போர் யுக்திகள் தொடர்பான தகவல்களை சேகரித்து, அமெரிக்க தூதரகத்திற்கு அந்நபர் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.